Monday, April 25, 2005

வலைப்பூ பதிபவர் கவனத்திற்கு...

தற்செயலாக எனது வலைப்பூவிற்கு வந்தவர்கள் அட்டவணையை பார்த்தபோது, யாரோ ஒருவர் http://indibloggers.blogspot.com இல் இருந்து வந்திருப்பது தெரிய வந்தது. அது என்ன பக்கம் எனப் பார்த்த போது, இந்திய நண்பர்களுக்குரிய வலைப்பூக்களின் விபரக்கோவை என அறிந்தேன். இது தான் IndiBloggers - Index of Indian Bloggers. ஏற்கனவே தமிழ் வலைப்பூ பதிவாளர்களைத் தொகுக்க ஒரு வலைப்பூ ஏற்கனவே இருக்கிறது. தென்னவனின் IndiBloggers விபரக்கோவை போலவே இன்னும் பல விபரக்கோவைகள் இருக்கிறது. சில நேரங்களில் புதிதாக தேடி வருபவர்கள் எளிதில் உங்கள் வலைப்பூவை கண்டுகொள்ள இது போன்ற வலைப்பூ விபரக்கோவை வசதியாக இருக்கும்.

Monday, April 11, 2005

இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 3


மொத்த உருவம்

*நகைப்பது நம்
பகை அல்ல
*புகைப்பது நம்
பழக்கம் அல்ல
*சிந்திப்பது நம்
அடிமை அல்ல
*நிந்திப்பது நம்
கொள்கை அல்ல
*சந்திப்பு நம்
அலர்ச்சி அல்ல

*சாதனை நம்
சரித்திரம்
*சத்தியம் நம்
சகாப்தம்
*வரலாறு நம்
எண்ணம்
*வரவேற்பு நம்
செயல்கள்
*மாண்பு நம்
பண்பின் சான்று
*வீம்பு நம்மெண்ணப்
புறம்போக்கு.

*அன்பு நம்
உள்ளப் பகிர்வு
*ஆசை நம்
தேச உயர்வு
*இன்பம் நம்மில்
விளைந்த தர்மம்
*அதர்மம் நம்மை
நீங்கிய துன்பம்
*படிப்பு நம்
இதயத்துடிப்பு
*பாவம் நமக்கான
சாபம்.

*வெற்றி நம்
முயற்சியின் உச்சி
*முயற்சி நம்
செயல் வளர்ச்சி
*பேச்சு நம்
வாயின் மழலை.

*அன்பில் நம்
பேச்சு - நட்பு
*அவசரத்தில் நம்
பேச்சு - இழப்பு
*பணம் உடைந்து
சில்லரையில் - செலவு
*வெறும் கையில்
கணம் - வரவு

*அகிலத்தில் உண்மை
மாயம்
*அறியாதவர் வாழ்வு
சாயம்

*நீரின் போலி
குமிழியில்
*மனிதனின் போலி
வாழ்வில்

*வரம் வேண்டும்
வாய்த்த பாதை
சென்றிட...

---------------------

பின்குறிப்பு: மேற்கண்ட கவிதை அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசியில் (1994-97) படித்தபோது எழுதியது. பல விசயங்கள் கேலியாகவும், ஆச்சர்யமாகவும், வித்தியாசமாகவும் இருக்கலாம். எனக்கே சில இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என தோன்றியது. ஆனால் கல்லூரிக் காலத்தில் மனதில் தோன்றியது, தோன்றியவாறே இருக்கட்டுமே என விட்டு விட்டேன். வித்தியாசமான விதத்தில் இருப்பது, அப்போதைய நிலையில் கல்லூரியின் கட்டுப்பாட்டின் காரணமாக இருக்கலாம்.

----------------------
பழைய பதிவுகள் இங்கே..
இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 1
இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 2

Sunday, April 10, 2005

இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 2

வாழ்வின் இரகசியம்

தாலாட்டு கேட்க
நினைத்தால்
தவிப்புகளே மிச்சம்.

வசந்தகாலத்தை
எதிர்பார்த்தால்
இலையுதிர் காலம்

காரத்தை நினைத்துத்
தொட்டால்
அமிலத்தின் சீற்றம்.

தென்றலுக்காய்
ஏங்கினால்
புயலின் அலைக்கழிப்பு

வாழ்வின் இரகசியம்
இச்சூழ்நிலை தனிலே..
முயன்றவர் வென்றார்.
முயல்வீர் நீவிர் அதனாலே!

--------- பழைய பதிவு இங்கே...
இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 1

Thursday, April 07, 2005

படித்தது...

ஒரு தம்பதியர் விவகாரத்துக்காக நீதிமன்றத்தை நாடினர். விவகாரத்து வழங்க நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஆனால் விவகாரத்துக்கான தீர்ப்பை வழங்க ஒரு சின்ன விசயம் தடையாக இருந்தது. அது வேறும் ஒன்றும் இல்லை. அத்தம்பதியருக்கு பிறந்த குழந்தை தான்.

தாய் குழந்தை தனக்கு வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். இப்படி சொல்கிறாள் நீதிபதியிடம். "இந்த உலகத்திற்கு அவளைக் கொண்டு வந்தவள் நான், எனவே நீதிபதி அவர்கள் எனது குழந்தை என்னோடு தான் இருக்க வேண்டும்"

தகப்பனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் குழந்தை தன்னோடு இருக்க வேண்டும் என்று விரும்பினார். நீதிபதி அவருடைய விசாரணையை, அத்தகப்பனின் விருப்பத்தைக் கேட்டார். ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் சற்று நேரம் அமைதி காத்தார் அத்தகப்பன். பிறகு மவுனம் கலைத்து தனது வாதத்தினை, கருத்தினை நீதிபதியிடம் இப்படிச் சொன்னார்.

"நீதிபதி அவர்களே, தானியங்கி இயந்திரத்தில் ஒரு காசு போடுகிறேன், பெப்சி வந்து விழுகிறது. விழுந்த பெப்சி எனக்குரியதா இல்லை அந்த இயந்திரக்குரியதா?"

Monday, April 04, 2005

இது புதுசு!...புதுமனை புகுவிழா அழைப்பிதழ்

எத்தனையோ வலைப்பூக்கள் நித்தம் நித்தம் பூத்தவண்ணம் இருக்கின்றன இணையத்தில். தமிழில் சமீபத்தில் பூத்த வலைப்பூக்களின் எண்ணிக்கை அதிகம். அதை அறிந்து கொள்ள, அனைத்து தமிழ் வலைப்பூக்களில் உள்ள புத்தம் புதிய பதிவு பற்றிய விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளா நண்பர் காசி தமிழ்மணம் என்ற இணையப்பக்கத்தை உருவாக்கி, பலவாறு மெருகேற்றி நல்ல பல நுட்பங்களுடன் தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்து வருகிறார். அதன் பரிமாணம், வளர்ச்சி பற்றி எழுதினாலே பல பக்கங்கள் நீளும். இப்படிப்பட்ட ஒரு தொகுத்து அளிக்கும் இணையப் பக்கத்தின் அருமையை நிச்சயம் அனைவராலும் உணர முடியும். இப்பக்கம் வருவதற்கு முன் சிரமத்துடன் ஒவ்வொரு வலைப்பூவிற்காய் வலைவலம் வந்த நாட்கள் பல உண்டு. பல நேரங்களில் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டி இருக்கும். நேரம் வெகுவாய் விரயம் ஆகும். ஆக வலைப்பூக்களினை ஒருங்கிணைக்கும் அளப்பரிய பணி தமிழில் வெற்றி நடை போடுகின்றது. ஆனால் ஆங்கில வலைப்பூக்கள் அதுவும் இந்தியாவில் மலரும் வலைப்பூக்களுக்கு தமிழ்மணம் போன்று ஒன்று இல்லை. சில தளங்கள் உள்ளன. அவை www.tamilblogs.blogspot.com போன்று வலைப்பூக்களின் எண்ணிக்கையையும் பெயரையும் மட்டுமே தகவலாக கொடுக்கின்றன. புதிய பதிவுகளை தெரிந்து கொள்வது சற்று சிரம்மே.

இந்தியாவில் மலரும் ஆங்கில வலைப்பூக்களுக்கு, இந்தியப் பெருமக்கள் பதியும் வலைப்பூக்களுக்கு அல்லது இந்தியா சார்ந்த, தமிழ் சார்ந்த அங்கில வலைப்பூக்களுக்கு என்று தமிழ்மணம் போன்ற தொகுப்பு இணையதளங்கள் என்னறிவுக்கு எட்டியவரை இல்லையென்றே தோன்றுகிறது. அவ்வாறு இருப்பின் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.

Good Morning என்ற பெயரில் அங்கில வலைப்பூ ஒன்று வெகு நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்து இருந்தேன். ஆனால் எந்த பதிவுகளும் இல்லாமல் ஒரிரு பதிவுகளோடு அப்படியே இருந்தது. ஆனால் சமீபத்தில் அந்த வீட்டிற்கு வெள்ளை அடித்து வண்ணம் பூசி குடிபுகும் அளவுக்கு மெருகேற்றி உள்ளேன். Image hosted by Photobucket.comநண்பர்களோடு மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளும் சுவையான தகவல்களோடு ஆரம்பிக்கிறேன். நேரம் வாய்க்கும் போது அப்பக்கம் சென்று வாருங்கள், ஆமா முகவரி இல்லாமல் எப்படி வருவீர்கள்? இந்தாங்க முகவரி: http://iniyanaal.blogspot.com

Sunday, April 03, 2005

இன்றைய பொன்மொழிகள் - தொகுப்பு 7

* உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்

* அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்

* சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.

* அனைத்துமே பூர்த்தியாகியிருக்க வேண்டும் முடிவில். அவ்வாறு இல்லையெனில் அது முடிவல்ல.

* நட்பு என்பது ஈரமான சிமெண்ட் கலவையில் கால் பதிப்பது போன்றது. சிறிது நேரம் நின்றால் (காலடிச்) சுவடுகளை விட்டுச் செல்வோம், அதிக நேரம் இருந்தால் விட்டுச் செல்ல இயலாது.

* சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை - யாரோ

* உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.

* நம்பிக்கைக்குரிய நணபருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை

* இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது

இதற்கு முந்தைய 'இன்றைய பொன்மொழிகள்' தொகுப்புகளை இங்கே காணலாம்.

தொகுப்பு 1, தொகுப்பு 2, தொகுப்பு 3, தொகுப்பு 4, தொகுப்பு 5, தொகுப்பு 6

ஆலமரம் சாய்ந்தது...!!!

போப் ஜான் பால் II மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஜான் பால் இன்று (1.07 அதிகாலை 03.04.2005) மரணமடைந்தார். மரபுகளை உடைத்தெறிந்த மாபெரும் மனிதர். சமய நல்லிணக்கத்தை நடைமுறையில் செயல்படுத்தியவர். Pope John Paul IIரோமன் கத்தோலிக்க மதத் தலைவராக அதிக வருடங்கள் இருந்தவர். உலகத்தின் அனைத்து தரப்பினரையும் அன்பால் கவர்ந்தவர். அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. பல புரட்சிகரமான சிந்தனைகளை விட்டுச் சென்றவர். இளைஞர்களின் பலம் அறிந்தவர். குழந்தைகளோடு அளவற்ற அன்பு கொண்டவர். அநீதிக்கு எதிராக முகம் பாராது எதிர்ப்பு தெரிவித்தவர். கடந்த காலத்தில் தனது சொந்த மதம் அடுத்தவர்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்குக்கூட வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டவர். அப்படிப்பட்ட உன்னத மனிதரின் மறைவிற்காய் கிறித்தவர்கள் மட்டுமல்ல உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.