Monday, May 16, 2005

இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 4

வன்முறையை வேரறுப்போம் வா

வல்லமை தாராய் தமிழ்த் தாயே வளரும் இச் சிறியோன்
வழங்கும் கவிக் களைகளைக் களைந்திடவே.

நன்மையொன்று புரிந்திட
நாடு சுதந்திரம் பெற்றிட
நாடினர் சிலர் வன்முறை

தான் என்றும் நிலைத்திட
தரணி புகழ் பாடிட
தன்னகத்தே காத்தனர் பலர் வன்முறை

கற்பாய் பேணும் நட்பிற்கே
களங்கம் விளைத்த வன்முறை
கட்டுக்கு அடங்காமல் வளர்ந்தது ஏனோ?

நாட்டினை, வீட்டினைப் பாராமல்
நம்மகத்தே புகுந்துவிட்ட வன்முறை
நாளாக நாளாக வளர்ந்துவிட்டது எம்முறை?

ஆதாயம் தேடும் ஆத்துமாக்கள்,
ஆண்டிடவே, அண்டிப் பிழைக்கும்
குடிகள் கெடவே வந்திட்டது வன்முறை

ஐந்தறிவு விலங்கிற்கு விலையென்பார்
வாங்கிடலாம்.
ஆருயிர் மனிதனுக்கு விலை என்றால்
கொடுத்திடல் இயலுமோ?

பெறுவதற்கரிய உயிர் பலவே
பூவாய், காயாய் உதிர்ந்திட்டால்,
பூலோகம் பிணக்கோலம் ஆகாதோ!

வன்முறையே!
இன்று ஒலிக்கும் மணியோசை உன்
இதயம் கலங்கடிக்கும் இடியோசை.
இன்னுயிர் காத்திடும் இன்னிசை.
ஒற்றுமை உலகம் உருவாக்கும் உயிரோசை.
ஒன்றுபட்ட எங்கள் குரலோசை
ஒழித்திடும் உன் அராஜகத்தை

உன் எஜமானர்கள் இன்று சிறை அறையில்
நீயும் இனிமேல் கல்லறையில்


----------
பின்குறிப்பு: இக்கவிதை அ.நா. ஜா. அ. கல்லூரி, சிவகாசியில் இளங்கலைப் படித்த போது, தமிழ் மன்றம் சார்பாக நடத்தப்பட்ட கவி அரங்கத்தில் பாடப் பட்டது.
----------

பழைய பதிவுகள் இங்கே..
இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 1
இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 2
இதயத்திலிருந்து இணையத்திற்கு...? - 3

Saturday, May 14, 2005

சர்தார்ஜி நகைச்சுவை

சிரிக்க வைக்க எல்லோராலும் முடியாது. பேச்சுத் திறமை கொண்ட பலரில் நகைச்சுவை உணர்வோடு பேசுபவர்கள் வெகு சிலரே. அதிலும் சிந்திக்க வைத்து சிரிக்க வைக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும். ஆனால் முட்டாள்தனமான செயல்களை வைத்து உருவாக்கப்படுகின்ற நகைச்சுவையும் கூட மிகப் பெரிய கருத்தை உள்ளடக்கி இல்லாவிட்டாலும் சிந்திக்க அதே நேரத்தில் குபீரென்று சிரிக்க வைத்துவிடும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, சர்தார்ஜி நகைச்சுவை தான். இது பற்றி கேள்விப்படாதவர் எவருக்கும் இருக்க முடியாது. எனது இன்னொரு ஆங்கில வலைப்பூவில் சர்தார்ஜி நகைச்சுவைப் பற்றி ஒரு பதிவு இட்டுருந்தேன். விருப்பமுடையவர்களுக்காக இணைப்பு இங்கே Good Morning...!!!: Sardar Jokes அதில் ஒன்று!!! ===================================== சர்தார்ஜி: ஏன் இங்க எல்லாரும் ஒடுறாங்க? ஒருவர்: இங்க ஓட்டப்பந்தயம் நடக்குது, வெற்றி பெறுபவர் (winnner) பரிசு பெறுவார். சர்தார்ஜி: அதுக்கு எதுக்கு எல்லாரும் ஓடுறாங்க. ======================================

Tuesday, May 03, 2005

யாஹூ யாஹூ ஹா...ஹா 1 ஜி.பி

ஜீமெயில் எப்ப ஜி.பி அளவில் மின்னஞ்சல் சேவையை அளித்ததோ அப்போதே மற்ற இலவச மின்னஞ்சல் வளங்கும் நிறுவனங்களுக்கும் குளிர்காய்ச்சல் அடிக்க ஆரம்பித்து விட்டது. ஜீமெயில் தற்சமயம் 2 ஜி.பி சேமிப்பு வசதி அளிக்கிறது இலவசமாக. இது பெரும்பாலானோர் அறிந்ததே. மிக அதிகமான வாடிக்கையாளர்களை வைத்துள்ள யாஹீ நிறுவனமும் முதலில் எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், ஏதோ கொஞ்சம் 6 MB யில் இருந்து பல மடங்கு உயர்த்தியது. அதே நேரத்தில் ஹாட் மெயிலும் தனது 2 MB யில் இருந்து அதிகரித்து. ஆனால் ஜி.பி அளவில் அல்ல. சிறிது சிறிதாக யாஹீ தனது மின்னஞ்சல் சேமிப்பு வசதியை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது அதிகபட்சமாக 1 ஜி.பி என இலவச மின்னஞ்சல் சேமிப்பு அளவை உயர்த்தி உள்ளது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது (இல்லை கொடுத்தது)முதலில் ஜீமெயில் தான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே. வாடிக்கையாளர்களுக்கு இலவசமாய் பெரிய சேவை. இதில் ஏற்கனவே பலர் அதிக சேமிப்பளவு வேண்டுமென ஜீமெயில், ரீடிஃப் என மாறினார்கள். பலர் தன்னுடைய சகல பரிவர்த்தனைகளையும் அப்புதிய முகவரிக்கே மாற்றிக் கொண்டார்கள். ஆனால் சிலர் (வருங்காலம் அறிந்தவர்கள்)எப்போதும் போல தனது பழைய யாஹீ மின்னஞ்சல் முகவரிக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஜீமெயிலில் இருக்கும், யாஹீவில் இல்லாத வசதிகள் என வெகு குறைவாகவே உள்ளன. அதாவது, வருகிற மின்னஞ்சலை மற்ற முகவரிக்கு மாற்றி விடுவது, pop3 வசதி, எளிய தேடும் வசதி என்பன போன்றவை. ஆனால் யாஹீவில் கணக்கு வைத்திருந்தால், பலவும் ஒரே முகவரியோடு செய்வது சாத்தியம். ம்..ம்..Messenger (தூதுவர்), குழுமம், என்பன அடக்கம்.
ஆக மொத்தத்தில் எல்லாக் கோப்புகளையும் இணையத்தில் இறக்கி வைத்துவிட்டு, இளைப்பாறிக் கொள்ளலாம் இனி...